இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட்
போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தை
சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் காலை 9 மணிக்கு போட்டி தொடங்கும் என முன்னதாக
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்றைய மழையால் மைதானம் ஈரப்பதத்துடன்
காணப்படுவதால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கும் என
அறிவிக்கப்ட்டுள்ளது.
13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சென்னையில்
பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால்,
போட்டி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என வானிலை
மையம் தெரிவித்துள்ளதால், இன்றைய போட்டியின் நிலை குறித்து சந்தேகம்
எழுந்துள்ளது. இருப்பினும், காலை 6 மணிக்குள் ரசிகர்கள் மைதானத்திற்குள்
செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியதால், அதிகாலை முதலே ரசிகர்கள்
சேப்பாக்கத்தில் குவியத் தொடங்கிவிட்டனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட், ஒருநாள், டிவென்டி-20 என இதுவரை
நடைபெற்ற 50 போட்டிகளில், 6 போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில்
பங்கேற்றுள்ளது. இதில் இந்திய அணி, 5 போட்டிகளில் வெற்றியும், 3
போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. இரண்டு போட்டிகள் மழையால்
கைவிடப்பட்டன.